’ஒரே படம் ஓஹோன்னு வாழ்க்கை’ என்ற ‘டயலாக்’ திரையுலகில் வலம் வரும் பலரது மனங்களிலும் பதிந்திருக்கும். ஆனால், அது தனது வேலையைக் காட்டுவது அரிதாகச் சிலரிடத்தில் தான். அப்படியொரு அதிர்ஷ்டம் கன்னட நடிகர், இயக்குனர் ரிஷப் ஷெட்டியைத் தொட்டு நெடுநாட்களாகிவிட்டது. ‘காந்தாரா’ படம் பெற்ற பெருவெற்றியினால் அகமகிழ்ந்தவர், தற்போது ‘காந்தாரா சேப்டர் 1’யை இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 2ஆம் தேதியன்று அப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
பெரும் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தினை ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதன் வியாபாரமும் பெரிய அளவில் இருந்து வருவதாகச் சொல்லப்பட்டு வந்தது.
அப்படியொரு சூழலில், ‘காந்தாரா சேப்டர் 1’ படத்தின் தெலுங்கு பதிப்பு சுமார் 100 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணியில் இருக்கிற சில நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே இப்படியொரு விலை தரப்படுவது வழக்கம். அதனை ‘காந்தாரா’ இரண்டாம் பாகம் அடைந்திருப்பது தெலுங்கு திரையுலகினரையே மலைக்க வைத்திருக்கிறதாம்.
இது முழுமையான உண்மையா என்பது இன்னும் சில நாட்களில் உறுதி செய்யப்பட்டுவிடும். ஆனாலும், இப்படியொரு தகவல் உலாவும் அளவுக்குச் செய்திருப்பதே ’காந்தாரா’ இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு கிடைத்த வெற்றி தான்..!
