தமிழக மாணவர் மீது ஏபிவிபி தாக்குதல்: மத்திய அமைச்சருக்குக் கனிமொழி கடிதம்!

Published On:

| By Kavi

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் 100 மலர்கள் குழுவினர், டெஃப்லாஸ் எனப்படும் மாணவர்கள் சங்க அலுவலகத்தில் ‘ஜனோ பி தோ யாரோ’ என்ற திரைப்படத்தைத் திரையிடக் கூடியிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஏபிவிபி அமைப்பினர் நூறு மலர்கள் குழுவினரைத் தாக்கியதோடு பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை சேதப்படுத்தியதாக 100 மலர்கள் குழுவினர் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலின் போது தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரான தமிழ் நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைக்கப்பட்டது.

ரத்த காயங்களோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்குப் பின் விடுதிக்குத் திரும்பினார்.

ஏபிவிபி அமைப்பினரின் செயலுக்குத் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு மலர்கள் குழுவினர் திரையிடத் திட்டமிட்டிருந்த படத்தை தடுத்து நிறுத்தியதோடு அவர்கள் தமிழக ஆராய்ச்சி மாணவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களைச் சேதப்படுத்தியுள்ளனர்.

அந்த தாக்குதலின்போது படுகாயம் அடைந்த தமிழ் நாசர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போது ஆம்புலன்ஸை நிறுத்திதாக்கியுள்ளனர்.

இதனைப் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் மற்றும் டெல்லி போலீசார் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துள்ளனர்.

ஏபிவிபி அமைப்பினர் இதுபோன்று தாக்குதலில் ஈடுபடுவது முதன்முறை அல்ல. எனவே தாக்குதலில் ஈடுபட்ட இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை தடுக்க வேண்டும். தமிழக மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

உத்தவ் தாக்கரே வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!

விஷால் நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் விபத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share