திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழிக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகப் பதிலளித்துள்ளார்.
திமுகவின் 15வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று (அக்டோபர் 9) சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் 5 துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக திமுக எம்பி கனிமொழி புதிதாக நியமனம் செய்யப்பட்டார்.
அவர், திமுக துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த 10 நிமிடங்களில் சென்னையில் பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி மகிழ்ந்தனர்.

இந்த நியமனத்திற்குப் பிறகு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கனிமொழி, “மு.க.ஸ்டாலின் தலைமையில் நம்முடைய கொள்கைக்கான போராட்டத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணா, அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கிறேன். உங்களது போராட்டம் அனைத்திலும் அணி வகுக்க தயாராக இருக்கிறேன்” எனப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், தங்கை கனிமொழிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாக பதிலளித்துள்ளார்.
பொதுக்குழு முடிந்தபின் தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், ”தங்கை கனிமொழி தனது ஏற்புரையில், ’அண்ணா.. அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கிறேன்.
கலைஞரின் இடத்தில் உங்களை இந்த நாடு பார்க்கிறது. உங்கள் வழிகாட்டுதலை எதிர்நோக்குகிறது’ என்று குரல் தழுதழுக்க, உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார்.

நான் உரையாற்றும்போது, ’அண்ணா இல்லை.. கலைஞர் இல்லை என்பதை எடுத்துக்காட்டி, அவர்கள் இல்லாத நிலையில்,
இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை சுமப்பது எத்தகைய கடினமான பெரும்பணி என்பதையும் என்னென்ன சவால்கள் நமக்கு எதிரே ஏராளமாக இருக்கின்றன என்பதையும் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு,
உங்களில் ஒருவனான என்னுடன், உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும் ஒருமித்த உணர்வுடன் துணைநிற்க வேண்டும்’ என்பதையும் எடுத்துரைத்தேன்.
தலைவர் என்கிற பொறுப்பில் உள்ள தலைமைத் தொண்டனான எனக்கு அந்த வலிமை வேண்டும் என்பதற்காகப் பொதுக்குழு நிறைவடைந்தவுடன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி,
உளப்பூர்வமாக அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு, கோபாலபுரம் இல்லத்திலும் சி.ஐ.டி காலனி இல்லத்திலும் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினேன்.
முன்னதாக, பேராசிரியர் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்