திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை ஏற்காதது முட்டாள்தனம் என தர்மேந்திர பிராதான் தெரிவித்த நிலையில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிப்பதை தவிரமற்ற எல்லா விஷயங்களிலும் ஒன்றிய அரசு ஆர்வம் காட்டுவதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றம் தீபம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தமிழ் மக்களும், இந்துக்களும் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை ஏற்காதது முட்டாள்தனம். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக்கொள்வார். சமூகத்திலிருந்து எப்படி திருக்குறளை பிரிக்க முடியாதோ அதை போல் தான் திருப்பரங்குன்றமும்” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது.” என விமர்சித்துள்ளார்.
