ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது யார் உண்மையாக திராவிட இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (பிப்ரவரி 28) கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “இன்னும் ஒரு பத்து நாட்களுக்குள் தேர்தல் அறிக்கை முழு வடிவம் பெற்று முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றார்
காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நிச்சயமாக விரைவிலே கூட்டணி இடங்கள் இறுதி செய்யப்படும்” என்றார்.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, “முதல்வர் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையாலும், திராவிட இயக்கக் கருத்துக்களை முன்னெடுத்துச் சொல்லக்கூடிய ஒரே தலைவர் என்ற நம்பிக்கையின் பேரிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையாலும் தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் வழியாகவே யார் உண்மையாக திராவிட இயக்கத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள், திராவிட மாடல் ஆட்சியை தரக்கூடியவர்கள் யார் என்று மக்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்கிறது ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
