அதிக வரி அளித்துவரும் தமிழகத்திற்கு நிதி வழங்க மத்திய பாஜக அரசு மறுத்து வருகிறது என குற்றச்சாட்டு உள்ள நிலையில், இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. kanimozhi condemns nirmala sitharaman speech
மத்திய அரசின் 2025-26 பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து, மாணவர்கள், பொது மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டி வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் தமிழக அரசு குறித்து அவர் விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிதி பகிர்வு… வாதமே தவறு! kanimozhi condemns nirmala sitharaman speech
நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு விவாதம் இருந்து வருகிறது. தமிழகம் 1 ரூபாய் கொடுத்தால், திருப்பி 7 பைசா கூட வழங்கப்படவில்லை என்ற வாதமே தவறு. அவர்கள் முன்வைக்கும் கால்குலேஷன் எங்கே இருந்து வருகிறது என்றே புரியவில்லை.
கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமென்றால், இங்கே நிறையேபேர் கோயம்புத்தூர் காரர்கள் இருக்கிறார்கள். சென்னைக்காரர்கள் நீங்களும் இருக்கிறீர்கள். கோயம்புத்தூரும் சென்னையும்தான் தமிழ்நாட்டுக்கு வரி கொடுக்கிறது.
இந்த நிலையில் கோயம்புத்தூர்காரங்களும் சென்னைகாரங்களும் ’நாங்கள் தானே அதிக வரி கொடுக்கிறோம். எங்களுக்குத்தான் திருப்பி கொடுக்க வேண்டும்? அரியலூரும், கோவில்பட்டியும் எக்கேடுகெட்டா எங்களுக்கு என்ன?” என்று கேட்டால் எப்படியிருக்கும்.
பாரத நாட்டில் அப்படியான பாலிசி இல்லை. மத்திய அரசு தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக உழைக்க கட்டுப்பட்டுள்ளோம். மத்திய அரசு தமிழகத்திற்காக இன்னும் எவ்வளவோ செய்வதற்கு இருந்தாலும், மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்பும் முயற்சிகள் நடக்கிறது” என குற்றஞ்சாட்டினார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தக்க பாடம் புகட்டுவார்கள்! kanimozhi condemns nirmala sitharaman speech
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என கனிமொழி தெரிவித்துள்ளார்.