நா.மணி
பாகுபாடு இல்லாத பொதுப் பள்ளிக் கல்வி முறை இந்தியாவெங்கும் பெருமளவு சீரழிந்துள்ளது. சமச்சீர் கல்வி என்ற பெயரில் உள்ள சமச்சீரான பாடத்திட்டம் கூட, கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கொண்டு வரப்பட்டது. அதுவும், பல்வேறு தடைகள் தாண்டி உச்சநீதிமன்றம் சென்ற பிறகே அமல்படுத்தப்பட்டது.
சமச்சீர் கல்வி என்ற சொல்லாடல் திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதால், அச்சொல்லாடலையே தவிர்க்க வேண்டும் என அதிமுக அரசு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு மறைமுக உத்தரவிட்டது. சமச்சீர் கல்வி என்று பேசப்படுகிற பொதுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆண்டுகள் பல ஆகியும் முன்பிருந்த அரசுப் பள்ளி, மெட்ரிக் பள்ளி நிர்வாகக் கட்டமைப்புகளில் கூட மாற்றம் அடையவில்லை. பாகுபாடில்லாத அனைவருக்கும் சமமான கல்வி இனி இல்லை. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்பது நீதியாகவே மாறிவிட்டது. எனவே, எப்பாடு பட்டாயினும் நமது பிள்ளைகளைத் தரமானது என்று கூறப்படும் தனியார் பள்ளிகளில் சேர்ப்போம் என்று அவரவர் வருவாய் பிரிவுக்கு ஏற்ப தனியார் பள்ளிகளை நாடத் துவங்கிவிட்டனர். நிதி இல்லை என அரசு காரணம் கூறுவது, தனியார் பள்ளிகளை ஊக்கப் படுத்தவும், மூலதனச் சுரண்டலை ஊக்குவிப்பதுமே பயன்படும். இதன் விளைவாக, தொடக்கக் கல்வி குற்றுயிரும் குலை உயிருமாய் கிடக்கிறது. தொடர்ந்து பள்ளிகள் மூடப்படுவதையும் மூடப்பட இருப்பதையும் மூடப்படும் அபாயத்தில் இருக்கும் பள்ளிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. தற்போதைய திமுக அரசு, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொதுப் பள்ளிக்கான இலக்கை நோக்கி நகர இது போதுமானதாக இல்லை. காமராஜர் வித்திட்ட பொதுப் பள்ளி, அருகாமை பள்ளி முறையே, பள்ளிக் கல்வியைச் சூழ்ந்துள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு.
இந்நிலையில் பொதுக் கல்விக்கு வித்திட்ட, காமராஜர் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. அனைவருக்கும் சமமான தரமான கட்டாய இலவச கல்வி வேண்டுமென போராடும் அனைவரும் இந்த நாளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொதுப் பள்ளி முறையை மீண்டும் வலுப்படுத்த புதிய சபதங்களையும், மேற்கொள்ளும் நாளாக இந்நாளை கைக் கொள்ள வேண்டும். தேசத்தின் முன்னேற்றத்திற்குக் கல்வியே ஆணிவேர். எனவே கல்வி பெறும் உரிமையைப் பரவலாக்க வேண்டும் என்று கனவு கண்டனர் தேசபக்த முன்னோடிகளான பகத்சிங், மகாத்மா காந்தி, கோபாலகிருஷ்ண கோகலே போன்றோர். இக்கனவை நனவாக்கச் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தும், சட்டமேதை மாமேதை அம்பேத்கரும் பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர்.
14வயது உட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமையை அரசியல் சாசனத்தின் வழியாகக் கொண்டுவருவதற்கு அன்றே முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் இந்த குழுவிற்குத் தலைவராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் நிதி இல்லை என்று காரணம் கூறி அடிப்படை உரிமையில் சேர்க்கப்பட வேண்டிய சட்டப்பிரிவை வழிகாட்டும் நெறிமுறைகளில் கொண்டு சேர்த்து, கல்வி உரிமையை முடக்கினார். இன்றுவரை கல்வி உரிமை ஈடேறவில்லை. கல்வி உரிமைச் சட்டத்திற்கு பிறகும் அது கனவாகவே நீடிக்கிறது. மத்திய அரசின் நிதி இல்லை என்று காரணம் கூறி 14 வயதுக்குட்பட்டோரின் கல்விக்குத் துரோகம் இழைத்த நிகழ்விற்கு சவால் விடும் வகையில் இரண்டு முக்கிய தலைவர்கள் தாங்கள் முதல்வராக இருந்த மாநிலங்களில் கல்விப் பணிகளைத் துவக்கினர். ஒருவர் காமராஜர். மற்றொருவர் கேரளாவின் முதல்வராக இருந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாத்.

காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாகுபாடற்ற பொதுப் பள்ளிகளை (அரசுப் பள்ளிகள்) திறந்தார். 3 கிமீக்கு ஒரு தொடக்கப் பள்ளி, 5 கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, என்ற முடிவை எடுத்தார். அப்பள்ளிகளில் பயில வரும் மாணவர்களின் வருகையை உத்தரவாதம் செய்யச் சீருடை, நோட்டு புத்தகம், மத்திய உணவு என வலுவான பொதுப் பள்ளிகளை விஸ்தரித்துக் கொண்டே சென்றார். அவருக்கும் “நிதி இல்லை. கஜானா காலி. தனியாரை நடத்த அனுமதிக்கலாம்” என்று அதிகாரிகள் ஆலோசகர்கள் ஆலோசனைகளை அள்ளித் தெளித்தனர். இவர்களது ஆலோசனைகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு,பள்ளி சீரமைப்பு மாநாடுகளை நடத்தத் துவங்கினார் காமராஜர். இம்மாநாடுகளில், தனியாரின் தாராளமான நிதியை பொதுப் பள்ளிகளுக்குக் கோரினார் கர்மவீரர். அரசுப் பள்ளிகள் வளர்ந்தது. பள்ளிகள் மட்டும் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது. இன்றைய PPP, அதாவது பொது தனியார் கூட்டு, (Public Private partnership) முன்மாதிரி பள்ளிகள், என்று கூறி, அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு மாற்றான முறைகளை அன்றே உருவாக்கிக் காட்டினார் காமராஜர்.
இந்தப் பள்ளிகளில் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வின்றி கல்வி வழங்கப்பட்டது. பாடப்புத்தகம் வழியாகவும் இத்தகைய பள்ளி முறையின் வழியாகவும் மாணவர்கள் பாடம் பயின்றனர். தமிழகம் இன்று அடைந்துள்ள முன்னேற்றத்தில், ஆரோக்கியமான விஷயங்களில், இந்தப் பொதுப் பள்ளிக் கல்வி முறைக்கும், அதில் பயின்று வளர்ந்தவர்களுக்கும் மிகப் முக்கிய பங்கு உண்டு. அவ்வாறு உருவாக்கப்பட்ட பள்ளிகள் தான் இன்று தொடர்ந்து மூடப்பட்டு வந்திருக்கின்றன. எங்கள் ஆட்சிதான் உண்மையான காமராஜர் ஆட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள்,காமராஜர் ஆட்சியை இனிமேல்தான் உருவாக்கப் போகிறோம் என்று சொல்பவர்கள், எல்லோரும் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்குத் திவசம் செய்து வருகிறார்கள். தங்கள் பங்கிற்கு ஆளுக்கொரு தனியார் பள்ளி கட்டிக் கொண்டு இடர் அற்ற லாபம் ஈட்டியும் வருகிறார்கள் . மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள் சர்வதேச பள்ளிகள் எனப் பள்ளிக் கல்வி புற்றீசல் போல் தனியார்மயம் பெருகிக் கொண்டே செல்கிறது. “அரசுப் பள்ளிகளில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் தனியார் பள்ளிகள் அவற்றில் ஈடுகட்ட முடியாதென்று அதன் உள்ளார்ந்த காரணத்தை வைத்துத்தான் அமர்த்தியா சென் கூறுகிறார். காமராசர் அரும்பாடுபட்டு உருவாக்கிய பொதுப் பள்ளி முறை பள்ளிக்கல்வி முழுவதும் அரசின் பொறுப்பிலும் பாகுபாடின்றியும், கொடுக்கப்பட வேண்டியது இன்றைய தேவை. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே காமராசர் துவங்கிய பொதுப் பள்ளிகள் ஒரு முன்மாதிரி. பொதுப் பள்ளி என்றால் நம் நினைவுக்குக் காமராசர் வருவது போல் அடுத்து நினைவு கூறப்படவேண்டியவர் இஎம்எஸ். அவர்கள். உலக கம்யூனிச இயக்க வரலாற்றில், அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதலில் ஏற்றுக் கொண்ட கடமையை இஎம்எஸ் அவர்களும் கேரளாவில் துவங்கினார். அனைவருக்கும் தரமான சமமான கல்வியை வழங்கும் கேரள கல்வி மசோதாவை உருவாக்கினார். கல்வி வியாபாரிகள் கொந்தளித்தனர். உச்சநீதிமன்றம் இம்மசோதா சரியானதென்று தீர்ப்பளித்தது. இருந்தபோதும் இஎம்எஸ்சின் அரசு இந்த கல்வி மசோதாவிற்காகவே கவிழ்க்கப்பட்டது. ஒரு ஜனநாயக குடியரசின் அடிப்படை கடமையே அனைவருக்கும் சமமான தரமான இலவசமான கல்வியை வழங்கவேண்டியது. ஆனால், அதனை இத்தனை ஆண்டுகள் போராடியும் பெறமுடியவில்லை. ஆனால் இக்கல்வி அடிப்படை உரிமைக்காகப் போராடுபவர்களுக்குக் காமராசரும், இஎம்எஸ்ஸும் எப்போதும் உயிரோட்டமான உந்து சக்தியாகவே இருப்பார்கள்.
இன்று (ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள்

கட்டுரையாளர் குறிப்பு
கட்டுரையாளர் பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.