மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. kamals RKFI warning to casting couch
திரையுலகில் நடிக்க வாய்ப்புக்கேட்டு வரும் பெண்கள் காஸ்டிங் கவுச் எனப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மேலும் வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதாகவும் அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை அடுத்து கமல், சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் ’தக்லைப்’ திரைப்படம் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து உருவாகி வருகிறது. இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
