கமல்ஹாசனைப் பற்றி…..

Published On:

| By Balaji

நடிகர் கமல்ஹாசனின் 67ஆவது பிறந்தநாள் இன்று (நவம்பர் 7). இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

**கமல் பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு**

1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமல்ஹாசன்.

2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்ஹாசன்தான் கடைசியாக பிறந்தவர்.

3. கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.

4. களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் கமல்ஹாசன்.

5.களத்தூர் கண்ணம்மாவில் ஜெமினி கணேசனுக்கு மகனாக நடித்தவர், அவ்வை சண்முகியில் மருமகனாகவும் தலைமுறை கடந்து நடித்தது கமல்ஹாசன் மட்டுமே.

6.கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க காரணமாக இருந்தவர் அவரது குடும்ப மருத்துவர். அவர்தான் துறுதுறு என்று இருந்த கமலை ஏவி. மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகபடுத்தியவர்.

7.முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தது கமல்ஹாசன் மட்டுமே.

8. கமல்ஹாசன் கதாநாயகனாக அறிமுகமானது 1974ல் வெளியான கன்னியாகுமரிஎன்கிற மலையாளப்படத்திலும், தமிழில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்திலும்.

9. கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது 1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படம்தான்.

10.நடிப்பு பற்றி அனைத்து அடிப்படை நுணுக்கங்களையும் கமல்ஹாசன் கற்றது அவ்வை டி. சண்முகத்திடம் தான்.

11. 1970 களில் கமல்ஹாசன் ரஜினியுடன் இணைந்து நடித்த படங்கள் நினைத்தாலே இனிக்கும்,

16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, இவை அனைத்தும் வெற்றி படங்கள்.

12. நினைத்தாலே இனிக்கும் படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப் படம்.

13. ராஜபார்வை திரைப்படம் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், கமல்ஹாசனுக்கு பாராட்டையும், விருதுகளையும் பெற்றுத் தந்தது இந்த திரைப்படம்.

14. கமல்ஹாசன் 1980களில் இந்தி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்த காலகட்டங்களில்தான் ஏக் து ஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார். இவை வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.

15. நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவர் கமல். அதற்கு ஓர் உதாரணம், கமல்ஹாசன் தந்தை சீனிவாசனின் உடல் தகனத்திற்காக வைக்கப்பட்டு இருக்க, உடலை சுற்றி சந்திரஹாசன், சாருஹாசன், கமல்ஹாசன் ஆகியோர் நிற்கிறார்கள். சிதையின் அருகில் இருந்த ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா இருவரையும் கமல்ஹாசன் அண்ணா… நீங்களும் வாங்க என்று கொள்ளி வைக்க அழைக்க, இருவரும் நெகிழ்ந்து விட்டார்கள்.

16. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமல்ஹாசன்.

17.கமல் ஹாசனுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா.

18.ஃபிலிம் ஃபேர் பத்திரிகை விருதை அதிகமுறை(18) வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்ஹாசன்தான். இனி எனக்கு விருது தராதீர்கள், புதிய இளைஞர்களுக்கு தாருங்கள் என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல் கடிதம் எழுதியதால், இந்த எண்ணிக்கை இத்தோடு நின்றது.

19. எண்பதுகளின் மத்தியில் `மய்யம்` என்ற இலக்கிய இதழை சிறிது காலம் நடத்தினார் கமல்.

20.மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார் கமல்ஹாசன்.

21. தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு நடன மாஸ்டராக இருந்திருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு `நான் ஏன் பிறந்தேன்`, சிவாஜிக்கு `சவாலே சமாளி`, ஜெயலலிதாவுக்கு `அன்புத்தங்கை`.

22. தன் உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக தானம் செய்திருக்கிறார் கமல்ஹாசன். தமிழ் திரை உலகத்தில் இதில் முன்மாதிரி இவர்தான்.

23.கமலின் விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

24. எட்டு முறை மாநில அரசின் விருதை பெற்று இருக்கிறார் கமல்ஹாசன். அதுபோல இரண்டு முறை ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்று இருக்கிறார்.

25. கமல்ஹாசன் இதுவரை ஐந்து மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

26. கமல்ஹாசனின் ஆத்மார்த்தமான நண்பராக வழிகாட்டியாக இருந்தவர் மறைந்த அனந்து.

27. கமல்ஹாசன் 1980களிலேயே அரசியல் பேச தொடங்கிவிட்டார். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டபோதுதமிழகத்தில் பேரணி நடத்தியவர் கமல்.

38.கமல் குடும்பத்தில் இருந்து மட்டும் மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கமல்ஹாசன், சாருஹாசன் மற்றும் சுஹாசினி.

29. 2005-ம் ஆண்டு சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழகம் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

30. கமல்ஹாசன் நடிப்புத் திறமைக்காக 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோல, 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

31. கமல்ஹாசன் முதன்முதலில் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது அவர் கதாநாயகனாக அறிமுகமான மலையாளப் படமான கன்னியாகுமரி திரைப்படத்திற்காக.

32. அபூர்வராகங்கள் படத்தில் நாயகனாக கமல்ஹாசன் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது முதல் முறையாக வழங்கப்பட்டது.

33. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஃபிரஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கமல்ஹாசன்.

34. தன் திரைப்படங்களுக்காக அதிக பிரச்சினைகளை சந்தித்தவர் கமல். இதில் நகைமுரண் என்னவென்றால், பிரச்சினையை சந்தித்த இவருடைய படங்கள் விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், விஸ்வரூபம் அனைத்தும் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்திய படங்களாகும்.

35. பாலுமகேந்திரா இயக்குநராக அறிமுகமான கோகிலா படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன்.

36. பாரதிராஜா இயக்குநராக அறிமுகமான 16 வயதினிலே திரைப்படத்தின் கதாநாயகனும் கமல்ஹாசன்.

37. கமல்ஹாசன் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து எழுதி ஒரு கட்டுரை தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்பின் பெயர் `தேடி தீர்ப்போம் வா’.

38. ரஜினிகாந்த் திரையுலக வாழ்க்கையில் முக்கியப்படம் முள்ளும் மலரும் அந்தப் படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கு காரணமாக இருந்தவர் கமல்ஹாசன்.

39. இதயம் பேசுகிறது வார இதழில் கமல் `தாயம்` என்ற தொடர்கதையை எழுதினார். இந்த தொடர்கதைதான் பின்பு ஆளவந்தான் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.

40. மெட்ராஸ் பாஷையை சரளமாக பேச கூடியவர் கமல்ஹாசன். இதற்கு குருநாதர் நடிகர் லூஸ்மோகன்.

41.நெல்லைத் தமிழ்,கொங்குதமிழ் இரண்டையும் சரளமாக பேசக்கூடியவர் கமல்ஹாசன்.

42.சினிமா சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவர் கமல். ஹே ராம் படத்தின் முதல் வசனமே, சாகேத்ராம்… திஸ் இஸ் பேக் அப் டைம்”. `பேக் அப்` என்ற வார்த்தையை முதல் வசனமாக வைப்பது சினிமாவில் கெட்ட சகுணமாக பார்க்கப்படும்.

43. கமலின் நற்பணி இயக்கத்தினர், இதுவரை 10,000-க்கும் அதிகமான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள்.

44. முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தவர் கமல்ஹாசன். மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபையில் அவரின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது.

45. சர்வதேச அரசியல்,உள்ளூர் அரசியலை சரளமாக பேசக்கூடியவர் தமிழ் நடிகர்களில் கமல்ஹாசன் மட்டுமே.

46. கமல்ஹாசன் தனது வீட்டில் மிகப்பெரிய வீடியோ லைப்ரரியை வைத்திருக்கிறார். அதில் உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன.

47. சிறந்த ஆங்கிலப்படங்களை கமல்ஹாசனும் – கவுண்டமணியும் பரிமாற்றம் செய்து கொள்வது வழக்கம்.

48. கமல்ஹாசன் உற்சாகமான மூடில் இருந்தால், தான் எழுதிய கவிதைகளை லயத்தோடு நண்பர்களுக்கு பாடிகாட்டுவார்.

49. கமல்ஹாசனுக்கு பிடித்தமான தலைவர் காந்தியடிகள்.

50. கமல்ஹாசன் கோலிவுட் என்ற வார்த்தையை எப்போதும் உச்சரிக்கமாட்டார். எப்போதும் தமிழ் திரையுலகம் என்று அழுத்தி உச்சரிக்கும் தமிழ் நடிகர் கமல்ஹாசன்.

51. கமல்ஹாசன் முதன் முதலில் தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் ராஜபார்வை திரைப்படத்தை தயாரித்தார்.

52. பின்னாளில் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி தற்போதுவரை படங்களை தயாரித்து வருகிறார்.

53. தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் கமல்ஹாசன் .

54. ஆனந்த விகடனில் கமல் எழுதிய `என்னுள் மையம் கொண்ட புயல்` என்ற தொடர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது

55. நடிகராக இருந்தாலும் திரைப்படங்கள் பார்ப்பதைவிட அதிக நேரம் புத்தகம் படிப்பதில்தான் கமல்ஹாசன் நேரத்தை செலவிடுவார்.

56. திரைப்பட தொழில் சம்பந்தமான புதிய தொழில்நுட்பங்களை, மாற்றங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வார்.

57. பிலிம் இல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் தயாரிக்கும் முறையை தமிழ் சினிமாவில் மும்பை எக்ஸ்பிரஸ் படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன்.

58. கணினி இந்தியாவில் அறிமுகமாகாத காலத்தில் விக்ரம் படத்தில் கணினியை பயன்படுத்தியவர் கமல்ஹாசன்.

59. இப்போது உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலின் ஆரம்பகால அடைமொழி காதல் இளவரசன்.

60. டைம் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம் இடம்பெற்றது.

61. பாலசந்தர் கமல்ஹாசனுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம், “மை டியர் ராஸ்கல்” என்று தொடங்கும்.

62. ஆர்.எஸ்.மனோகரின் இலங்கேஸ்வரன் நாடகத்தைப் திரைப்படமாக மாற்றும் விருப்பம் இன்று வரை நிறைவேறாமல் உள்ளது.

63. பாலச்சந்தரை அப்பா என்றும் பாரதிராஜவை அண்ணன் என்றும் கமல்ஹாசன் அழைப்பது வழக்கம்.

64. சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கிய முதல் தமிழ் நடிகர் கமல்ஹாசன்.

65.தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போராட்டத்தை தனது ட்விட்டர் பதிவின் மூலம் சர்வதேச தமிழ் சமூகத்திடம் சென்றடைய காரணமானவர்களில் கமல்ஹாசன் முதன்மையானவர்.

66.தனது 63-வது வயதில் மக்கள் நீதி மய்யம் எனும் பெயரில் அரசியல் கட்சியை துவங்கினார்.

67.ஒரே வருடத்தில் வெளியான ஐந்து வெள்ளிவிழா படங்களில் நடித்தவர் கமல்ஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் இந்திய சினிமாவில் முறியடிக்கப்படவில்லை. அந்த படங்கள் வாழ்வே மாயம், மூன்றாம்பிறை, தேரி கஸம், சகலகலாவல்லவன், தோ கமல் ஹோகயா

**அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share