கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் சக்தி பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஜூலை 17ஆம் தேதி காலை, கனியமூரில் உள்ள பள்ளியின் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து சூறையாடினர்.
பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சிலர் பள்ளிக்குச் சொந்தமான பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகளும் வெளியாகின. போராட்டக்காரர்கள், கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் போலீசார் சிலர் காயமடைந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டதாக 329 பேர் கைது
இதனை தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக வதந்தி பரப்பும் வகையில் முகநூலில் பதிவிட்டதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சூர்யா மற்றும் தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 2 ஆசிரியைகள் கைது
மாணவி மரணம் தொடர்பாக ஏற்கனவே பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி தனது கடிதத்தில் வேதியியல், கணிதம் பாடங்கள் கடினமாக இருக்கிறது. ஈகுவேஷன் எல்லா போட வரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
~அப்துல் ராபிக் பகுருதீன்
Comments are closed.