கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை இன்று (ஜூன் 23) காலை நிலவரப்படி 57 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அடுத்தடுத்து உயிர்கள் பலியாகி வருவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கடந்த 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்த நிலையில் அன்று இரவு முதல் பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட தொடங்கியது.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு வரை மொத்தம் 55 பேர் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மதன் உள்பட 2 பேர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் 159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா