தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று ( ஆகஸ்ட் 7 ) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலைஞருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஏறக்குறைய இருபதாண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய அரசியல்வாதியும் எழுத்தாளருமான மு.கருணாநிதியின் நினைவுநாளில் அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த ஒரு வெகுஜனத் தலைவர். பொறுமை மற்றும் விடாமுயற்சி ஆகியவை அவரது அரசியல் வாழ்க்கையின் அடையாளங்களாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள பதிவில் , “திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை திரு . மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும்”
என்று குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்.
சிறப்புக் கட்டுரை: வள்ளுவரை மிஞ்சுகிறதா கலைஞரின் திராவிட எழுதுகோல்?