குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து அஸ்ஸாம் மாநிலம் முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு வருகை தரும் அயல் நாட்டுத் தலைவர்களின் பயணங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக வங்காள தேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன், உள் துறை அமைச்சர் அசாதுஸ்மான் ஆகியோர் தங்களது மேகாலாய பயணத்தை நேற்று ரத்து செய்தனர். டிசம்பர் 12 முதல் 14 வரை 6 வது இந்தியப் பெருங்கடல் நாடுகளின் உரையாடலுக்காக இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருந்தனர். அஸ்ஸாமில் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நடைபெற்று வரும் கடுமையான போராட்டங்களால் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 15 முதல் 17 ஆம் தேதி வரை அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் இந்திய ஜப்பான் ஆண்டு உச்சி மாநாடு நடைபெற இருந்தது. எப்படி இந்திய சீன ஆண்டு உச்சிமாநாடு தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடந்ததோ அதுபோல, குவஹாத்தியில் பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.
ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு நாட்களில் அசாம் தலைநகரிலும், வடகிழக்கு மாநிலத்தின் பிற இடங்களிலும் பரவலான போராட்டங்களை அடுத்து ஜப்பான் பிரதமரின் இந்திய வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குவஹாத்தியின் மத்திய பகுதியில் மோடி, ஜப்பான் பிரதமர் படங்களோடு வைக்கப்பட்டிருந்த வரவேற்புப் பதாகைகளை போராட்டக் காரர்கள் இழுத்து சென்று கிழித்து எறிந்துவிட்டனர்.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 13) வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் எதிர்காலத்தில் பரஸ்பர வசதியான தேதிக்கான பயணத் தேதியை முடிவு செய்துள்ளனர்” என்று கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வரும் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் மேகலாயா , அருணாசல் பிரதேசத்துக்கு செல்லும் பயணத்திட்டத்தை ரத்து செய்திருக்கிறார். வட கிழக்கு போலீஸ் அகாடமி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக செல்ல திட்டமிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்கள் முழுதும் பரவி வரும் போராட்டங்கள் காரணமாகவே பயணத்தை ரத்து செய்துள்ளார்.
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பரவும் கலவரங்கள் பற்றி பிரதமர் மோடி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.
�,”