Uபா.ரஞ்சித்: நானும்… சினிமாவும்…

public

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் கடந்த 6ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதாகவும் அதற்காகப் படத்தின் வெற்றிச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி கூறும் வகையிலும் சென்னையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரை இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரவிக்குமார், ஸ்ரீகணேஷ், கவிஞர் அறிவுமதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசியதன் முக்கியத் தகவல்களைப் பார்ப்போம்.

**சினிமாவுக்கு ஏன் வந்தேன்?**

இயக்குநர் பா.ரஞ்சித் பேசியபோது, “படம் எடுக்கணும், படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை. காலேஜ் படிக்கிற வரைக்கும் நான் சந்தித்த ஆளுமைகள்தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தின. என்னை அழ வைத்த படங்கள்தான் நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளைப் படமாகப் பதிவு செய்யத் தூண்டின. நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னைத் தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வர வேண்டும் என்று நினைத்தேன். புத்தகங்கள் வாசிப்பது பிரச்சினையாக இருந்த காலத்தில்தான் நான் வந்தேன். நான் தாஸ்தாவஸ்கி நாவலைப் படிக்கும்போது ஓர் இயக்குநர் என்னை கிண்டல் செய்தார். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறைய பேருக்கு பிரச்சினை இருந்தது. அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமா தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன். மாற்று சினிமாவுக்கு மக்களிடமிருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்” என்று தனது சினிமா தாகம் தொடங்கிய மையப்புள்ளிகளைக் குறிப்பிட்டார்.

**சினிமாவின் மீதான நம்பிக்கை வந்தது எப்படி?**

காலா, பரியேறும் பெருமாள் திரைப்படங்கள் தன் திரைவாழ்வை மாற்றிய விதம் குறித்து பேசியபோது “ ரஜினி நடிக்கும் படத்தை இயக்குவேன் என்று நான் நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் ‘அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போட்டதுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு’ என்று பேசியபோது நான் சினிமாவுக்கு வந்ததன் பலனை அடைந்ததாக உணர்ந்தேன். ‘பரியேறும் பெருமாள்’ படம் எடுக்கும்போது பெரிய பயம் இருந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் மீது பயம் இருந்தது. அந்தப் படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். மீடியாவுக்குக் காட்ட வேண்டும் என்று முடிவானதும் இன்னும் பயமாக இருந்தது. ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரி செல்வராஜைக் கட்டிப்பிடித்தார்கள். எனக்கு கை கால்கள் உதறத் தொடங்கியது. அந்தப் படம் தந்த உற்சாகம் பெரியது. அந்தப் படம் கமர்ஷியலாகவும் பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படம்தான் ‘குண்டு’ படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது.

**குண்டு உருவானது எப்படி?**

அதியன் உழைப்பு எனக்குத் தெரியும். இந்த டீம் திறமைமிக்க மனிதர்களைக் கொண்டது. தகுதி, திறமை என்பதை இங்கு கவனிக்கும் விதத்தில்தான் பிரச்சினை இருக்கிறது. இந்தப் படத்தையும் மீடியாவுக்குப் போட்டுக்காட்டுவதில் பயம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடிவிட்டார்கள். ரொம்ப சூப்பரான வெற்றியை மீடியாவும் மக்களும் தந்தார்கள். வெறும் எதிர்ப்பை மட்டும் காட்டாமல் நல்ல விஷயத்தைக் கொண்டு சேர்ப்பதிலும் மீடியா முன்னணியில் இருக்கிறது. சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம் ஒரு தகவலை எளிதாகக் கடத்த முடியும் என்றால் அது சினிமாவில்தான் சாத்தியம். அப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தந்து கொண்டிருக்கும்” என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *