wஅமித்ஷா மசோதா: அதிமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு!

public

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று (டிசம்பர் 9) உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் மூலம் வங்கதேசம், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தல்களை அனுபவித்த இஸ்லாமியர் அல்லாத அகதிகள், மக்கள் குடியுரிமை பெறுவார்கள். இம்மசோதா தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியான நிலையிலேயே, இது அரசியலமைப்பு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறி கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று தொடங்கப்படுவதற்கு முன்னதாக குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து முஸ்லீம் லீக் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாம் மாநிலத்தின் கவுகாத்தி உள்ளிட்ட பல இடங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏஐயுடிஎஃப் அமைப்பினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இதற்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நாட்டிலுள்ள சிறுபான்மையினர் மக்கள் குறிவைக்கப்படுவதைத் தவிர இந்த சட்டத்தில் எதுவுமில்லை” என்று குற்றம்சாட்ட சாட்ட, இதற்கு பதிலளித்த அமித் ஷா, “இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக 0.001 சதவிகிதம் கூட இல்லை. மசோதா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன். அவையிலிருந்து யாரும் வெளிநடப்பு செய்ய வேண்டாம்” என்று வேண்டுகோள் வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் மீது பேசிய திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர் பாலு, “இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை சட்ட திருத்த மசோதா மறுக்கிறது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சவுகத் ராய், “இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மற்றும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தக்கூடியது. இது அரசியலமைப்பின் 14ஆவது சட்டப்பிரிவை மீறுவது போல அமைந்துள்ளது. அம்பேத்கர் உள்ளிட்ட நம் தேசத்தந்தைகளின் கற்பனைகளுக்கு இந்த சட்டம் எதிராக உள்ளது” என்று விமர்சித்தார்.

அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி பேசுகையில், “இத்தகையை சட்டத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுங்கள். இல்லையெனில் நியூரம்பெர்க் இனச் சட்டங்கள் மற்றும் இஸ்ரேல் குடியுரிமைச் சட்டம் போல இதுவும் ஆகிவிடும். உள் துறை அமைச்சரின் பெயர் ஹிட்லர் மற்றும் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் டேவிட் பென் -குரியன் பெயர்கள் வரிசையில் இடம்பெறும்” என்று கடுமையாகச் சாடினார்.

“தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தாதீர்கள்” என்று வேண்டுகோள் வைத்த சபாநாயகர் ஓம் பிர்லா, ஒவைசியின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.

இறுதியாக உரையாற்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, “ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசத்தில் வாழும் இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், கிருஸ்தவர்கள், பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுகிறது. மசோதா மூலமாக இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். ஆனால், இந்த மசோதா முஸ்லீம்களுக்கு எதிராக கொண்டுவரப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை” என்று தெரிவித்தார்.

மேலும், “குடியுரிமை மசோதா அரசியல் சாசனத்தின் எந்தவொரு பிரிவுக்கும் எதிரானது அல்ல. 1971ஆம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளுக்கு இந்திரா காந்தி குடியுரிமை வழங்கினார். அதற்காக அரசியல் சாசனத்தில் 14ஆவது பிரிவையும் மேற்கோள்காட்டினார். வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கிய அவர் ஏன் பாகிஸ்தான் அகதிகளுக்கு வழங்கவில்லை. ஏன் உகாண்டாவில் இருந்துவந்த அகதிகள் கூட இந்தியாவில் குடியுரிமை பெற்றனர். அதில் ஏன் இங்கிலாந்து இல்லை. சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் இருந்து வந்த மக்களை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் குடியுரிமை பெறும் க்ரீன் கார்டை பெற கடுமையான விதிமுறைகள் உள்ளன.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகியவை இஸ்லாம்தான் தங்களின் நிலச்சட்டம் என்றனர். நாடு பிரிவினையின்போது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க நேரு-லியாகத் அலிகான் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை இந்தியா நேர்மையாக பின்பற்றியது. எனினும், மற்ற நாடுகள் பின்பற்றவில்லை. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டனர். எனவே இந்த மசோதா கண்டிப்பாக தேவை” என்று கூறிய அமித் ஷா, பாஜக நாட்டை பிளவுபடுத்தவில்லை என்றும், காங்கிரஸ்தான் நாட்டை மத ரீதியாக பிளவுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 293 வாக்குகளும், எதிராக 82 வாக்குகளும் பதிவானதால் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

**அதிமுக ஆதரவு**

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், “மசோதாவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளோம். மசோதா மீது எங்களுக்கு உள்ள கருத்துக்களை அவையில் பதிவு செய்வோம். ஆனால், வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆதரவாகவே வாக்களிப்போம்” என்று குறிப்பிட்டார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *