கட்டாய ஓய்வு தொடர்பாக வெளியான செய்தி குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் 30 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது 50 வயது பூர்த்தியானவர்களின் விவரங்களையும், அவர்களின் ஆவணங்களை வரும் 10ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கும்படியும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியகத்தின் இயக்குனரகத்திலிருந்து வெளியிடப்பட்டதாக ஒரு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானது. அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படவுள்ளதாகவும், அதன் காரணமாகவே இந்த தகவல்கள் கோரப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தொழிற்சங்கங்களும் இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள ஆரம்பித்தன. எனினும் இந்தத் தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது.
இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியகம் இன்று (டிசம்பர் 5) வெளியிட்ட செய்தி குறிப்பில், “50 வயது அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு கட்டாய ஓய்வு என்று வெளியான செய்தியில் உண்மையில்லை. தமிழக அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.�,