பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய தமிழகத்துக்கான கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நேற்று (டிசம்பர் 4) மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
அப்போது ஸ்டாலின் சார்பில் கலைஞர் எழுதிய திருக்குறளுக்கான உரை நூல் ‘குறளோவியம்’ முரசொலி சார்பில் வெளியான ‘நிறைந்து வாழும் கலைஞர் நினைவு மலர் 2019’ ஆகிய நூல்களையும் மோடியிடம் கொடுத்தனர்.
மு.க.ஸ்டாலின் சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்தில், திமுகவின் முக்கியமான கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கூட்டாட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில், மாநிலங்களுக்கு உரிமையளிக்க, அரசியல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது, . முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக ஆக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய கல்வி கொள்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே கொண்டு வர வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை உடனடியாக அமைக்கப்படவேண்டும்” என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
இந்த கோரிக்கைகள் எல்லாம் திமுக தொடர்ந்து எழுப்பி வருகிறவைதான். ஆனால் இவற்றை பிரதமரிடம் இப்போது நேரடியாக சென்று சந்தித்துக் கொடுக்க என்ன தேவை ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வி டெல்லி முதல் தமிழக அரசியல் வட்டாரம் வரை எதிரொலிக்கிறது. திமுக தலைவர்களுடன் சிரித்துப் பேசிய மோடி, ‘ ஸ்டாலின் எப்படி இருக்கிறார்?’ என்று நலம் விசாரித்திருக்கிறார்.�,