திருச்சியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து பென் ட்ரைவ், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கேஆர்எஸ் நகரில் வசித்து வரும் சர்புதீன் என்பவர் அவ்வப்போது அரபு நாடுகளுக்குச் சென்று பணியாற்றியவர். இவர் தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா அமைப்பின் முகநூல் குழுவில் இணைந்து அல்கொய்தா அமைப்பினர் வெளியிடும் கருத்துக்களுக்குப் பதில் அளிப்பது மற்றும் அவர்கள் பதிவேற்றும் ஆவணங்களை டவுன்லோட் செய்வது, லைக் செய்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறி, கடந்த ஒரு மாத காலமாகத் தேசிய புலனாய்வு அமைப்பினர் சர்புதீன் முகநூல் கணக்கைக் கண்காணித்திருக்கின்றனர். இன்று தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் கேரள டிஎஸ்பி ஜார்ஜ் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் திருச்சி மாநகர போலீசார் துணையுடன் சர்புதீன் வீட்டில் காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சர்புதீன் உறவினரான ஜாபருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. வீட்டிலிருந்து செல்போன், பென் ட்ரைவ் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியதுடன், தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக இருவரையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். சர்புதீன் நாளை வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக ஏற்கனவே இனாம் குளத்தூரில் ஒரு வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்திய நிலையில், இன்று எடமலைப்பட்டி புதூரில் சோதனை நடத்தியுள்ளனர்.�,