~சுபஸ்ரீ வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்!

public

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமணத்துக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வருகையின்போது பிளக்ஸ், பேனர்கள் வைக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தலைமறைவாக இருந்துவந்த ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென ஜெயகோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இன்று (நவம்பர் 11) உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏழை நோயாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மதுரையில் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலந்தூர் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் வரும் வரை அவர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும்.

இதுபோலவே ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *