இலங்கை தமிழர்கள் உணர்வுகளை பேசும் ‘பயணங்கள் தொடர்கிறது’.

public

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘பயணங்கள் தொடர்கிறது’.

டாக்டர்.அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். அவரது நடிப்பில் தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அபிலாஷ் இயக்கியுள்ளார். இயக்குநர் அபிலாஷ் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்களான ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

போர் மூளும் சூழலில் உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்காக இலங்கையில் இருந்து மகளுடன் தமிழகம் வருகிறார் தந்தை. ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அத்தகைய சூழலில் இருவரும் பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்துப் பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இத்தகைய சூழலில் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படத்தில் சொல்லி இருப்பதாக படத்தின் இயக்குநர் அபிலாஷ் கூறுகிறார்.

இந்தப் படத்தில் அமர் ராமச்சந்திரனின் பத்து வயது மகளாக நேஹா நடித்துள்ளார். இவர்களுடன் பாலாசிங் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் வெள்ளித்திரைக்கு புதுமுகங்கள் என்றாலும் நாடக மற்றும் சின்னத்திரை அனுபவம் கொண்ட பலரும் நடித்துள்ளனர்.

கேரளாவில் வசித்துவரும் படத்தின் இயக்குநர் அபிலாஷ் வளர்ந்தது, படித்தது எல்லாம் செங்கோட்டையில் தான். 2008ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர் சினிமாவிற்கு முயற்சி செய்துகொண்டே அனிமேஷன் தொழில்நுட்பப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் தன்னிடம் படித்த இலங்கை மாணவர்கள் பலரும் கூறிய, அவர்களுடைய துயரமான வாழ்வியல் நிகழ்வுகளைக் கேட்டு அபிலாஷ் மிகவும் மனம் வருந்தினார். அவற்றை உலகம் முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு படத்தை இயக்க எண்ணினார்.

இவரது கதையில் நடிப்பதற்கு பசுபதி, பார்த்திபன் போன்றோர் பச்சைக்கொடி காட்டினாலும், வியாபார காரணங்களால் இப்படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. அந்த நேரத்தில் தான் படத்தின் கதையைக் கேட்ட பிரபல மலையாள நடிகர் டாக்டர்.அமர் ராமச்சந்திரன் இந்தப் படத்தில் நடிப்பதுடன் தானே தயாரிக்கவும் முன் வந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து விட்டது. இலங்கையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காத காரணத்தால் கோவில்பட்டி, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளரான அவுசேப்பச்சன் இசையைமைத்துள்ளார். பிரசாத் பிரணவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு இரண்டு பாடல்களை தாமரை மற்றும் பழனிபாரதி ஆகியோர் எழுதியுள்ளனர். அது மட்டுமின்றி கவிஞர் பாரதிதாசனின் ‘தலைவாரிப் பூச்சூடி’ என்ற பாடலும் படத்தில் இடம்பெறுகிறது.

தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்பாக, சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதற்காக அனுப்பும் பணிகளில் இயக்குநர் அபிலாஷும், தயாரிப்பாளர் ராமச்சந்திரனும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

**இராமானுஜம்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *