பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-சீனா இடையேயான முறைசாரா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் இன்று (அக்டோபர் 11) நடைபெறவுள்ளது. இதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், விமான நிலையத்திலிருந்து திருவிடந்தை சென்ற பிரதமர் மோடியை, அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் வரவேற்றனர். இதன்பின்னர், அங்கிருந்து கார் மூலமாக கோவளம் சென்றார்.
இதுதொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வந்திறங்கியுள்ளேன்.கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்” என்று தமிழிலும், சீன மொழியிலும் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று பகல் சரியாக 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு அரசின் சார்பில் அளிக்கப்படும் வரவேற்பில் 4,000 பேர் வரை கலந்துகொள்கின்றனர். இதற்காக நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் விமான நிலையத்தில் 500 பேரும், வழிநெடுக 3,500 பேரும் கலந்துகொள்கிறார்கள். பாஜகவின் சார்பில் 32 இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீன அதிபரின் வருகையையொட்டி சென்னை முழுவதும் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தங்கவுள்ள கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 3 பெண்கள் உள்பட 5 திபெத்தியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் 4 சீன இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஒருவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் தீவிர விசாரணை நடைபெறுகிறது. சீன அதிபரை வரவேற்பதற்காக கத்திபாரா பாலம் அருகே இன்று காலை முதலே பள்ளி மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதற்கு, கடும் வெயிலில் மாணவர்களை நிற்கவைத்துதான் சீன அதிபரை வரவேற்க வேண்டுமா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
�,”