அபராதத் தொகையை மாநில அரசு குறைக்கலாம் : கட்கரி

போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்படும் கடுமையான அபராதத்தை, விரும்பினால் மாநில அரசு குறைத்து திருத்தம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, சாலை விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அதிகபட்சமாக ரூ.1,41,000 அபராதம் கட்டியுள்ளார். கடுமையான அபராதம் விதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது மாநிலத்தில், மத்திய அரசு விதித்த அபராதத் தொகையைக் குறைத்து உத்தரவிட்டார். அதன்படி, ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு 1000 ரூபாய் மத்திய அரசு அபராதம் விதித்திருந்த நிலையில், அதனை 500 ரூபாயாக குறைத்துள்ளது குஜராத் அரசு. ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு 5000 ரூபாயிலிருந்து 2000 முதல் 3000 ரூபாயாகவும், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிப்பதற்காக விதிக்கப்படும் அபராதம் 1000 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், காற்று மாசுபாடு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு அபராதம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 முதல் 3000 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட அபராதம் செப்டம்பர் 16ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.