ஸ்ரீநகர், ஜம்மு மாநகராட்சி மேயர்களுக்கு இணையமைச்சர் அந்தஸ்து வழங்கி அம்மாநில அரசு நேற்று (ஆகஸ்ட் 21) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370 ரத்து செய்யப்படுவது குறித்தும், ஜம்மு காஷ்மீர், இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்பது குறித்தும் மத்திய அரசு, ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கிருக்கும் பிரதான அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வீட்டுச் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல், ஜம்மு காஷ்மீரில் முதல்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் 2ஜி இணைய சேவையும், 17 பள்ளத்தாக்குகளில் லேண்ட்லைன் சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி, அரசு அலுவலகங்கள் ஆகியவை மீண்டும் செயல்படத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு மாநகராட்சி மேயர்களுக்கு இணையமைச்சருக்கு நிகரான அதிகாரம் வழங்கி கூடுதல் தலைமைச் செயலாளர் சுபாஷ் ஷிபர் நேற்று (ஆகஸ்ட் 21) உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘இரு மாநகராட்சி மேயர்களும் இணையமைச்சர் அந்தஸ்தில் செயல்படுவார்கள். அதற்கு ஏற்ற வகையில் நடைமுறைகள் மற்றும் அரசுப் பணி ஒதுக்கீடுகளிலும் மாற்றம் செய்யப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரிலுள்ள மாநகராட்சி அமைப்புகளுக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகர் மேயராக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜூனையத் மாத்துவும், ஜம்மு மேயராக பாஜகவைச் சேர்ந்த சந்திரமோகன் குப்தாவும் தற்போது பதவி வகித்து வருகின்றனர். இனி அவர்கள் இணையமைச்சர்களாகச் செயல்படவுள்ளனர்.
இந்த அந்தஸ்துடன், ஜூனையத் மாத்து, சந்திரமோகன் குப்தா ஆகிய இருவரும் விரிவாக்கப்பட்ட அதிகாரத்துடன் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியும். மேயர்களாக, அவர்களின் பதவி மற்றும் பொறுப்புகள், நகராட்சி அதிகார வரம்புக்குள் மட்டுமே செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
<
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!
சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?
‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?
கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?