காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரிக்கும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (ஆகஸ்ட் 9) ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகப் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது அங்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (ஆகஸ்ட் 10) முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கவுள்ளன. வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்காக கடும் நிபந்தனைகளுடன் 144 தடை உத்தரவு காஷ்மீரில் சில இடங்களில் தளர்த்தப்பட்டது. கத்துவா உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் இயங்கின. நிலைமை படிப்படியாக சீரடைந்து வந்தாலும் கல்வீச்சு உட்படப் போராட்டங்களை ஒடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் டிராஜா மற்றும் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் காஷ்மீரில் உள்ள தங்களது கட்சியினருடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுச் சென்றிருந்த நிலையில் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் அசாதாரண சூழல் நிலவியது.
இந்தநிலையில், காஷ்மீர் மற்றும் லடாக் என்னும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்
அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!
புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?
டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?
தீபாவளிக்கு தனுஷின் டபுள் ட்ரீட்!