மதுரை மாநகராட்சியில் ஊழல் அதிகரித்திருப்பதாக வழக்கு விசாரணை ஒன்றின்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.முருகன், பணி மாற்றத்துக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு நேற்று (ஜூலை 10) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “நாட்டில் ஊழல், லஞ்சம் அதிகரித்துவிட்டது. லஞ்சத்தை முழுமையாகத் தடுக்க முடியாது. ஆனால், குறைக்க முடியும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறைகள் கணினி மயமாக்கப்பட்ட பிறகும் ஊழல் அதிகரித்துள்ளது.
ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மதுரை மாநகராட்சியில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. மாநகராட்சி சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை மீட்க வேண்டும். மதுரை மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களில் நான்கு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். முறைகேடுகளைத் தவிர்க்க லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும் “மதுரை மாநகராட்சி ஊழியர்கள் தங்களது மற்றும் குடும்பத்தினர் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை 12 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையர் உத்தரவிட வேண்டும். சொத்து விவரங்களை ஆய்வு செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!
இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!