இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5ஆம் தேதி திருப்பனந்தாளில் நடைபெற்ற நீலப்புலிகள் அமைப்பின் தலைவர் டி.எம்.உமர் பாரூக் நினைவு தினப் பொதுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் காலத்தில்தான் பட்டியலின மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், ரஞ்சித் மீது இரு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ரஞ்சித்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரஞ்சித் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ரஞ்சித்துக்கு ஆதரவாக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரிலுள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று (ஜூன் 17) வழக்கறிஞர் உதயபானு தலைமையில் சென்ற தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இம்மனுவை அளித்தனர்.
அதில், “அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையை நசுக்கும் வகையில் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்கை ரத்து செய்ய வேண்டும். பாலிமர் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிராக சாதிய வன்மத்துடனான பதிவுகளைத் தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், “ரஞ்சித் மீது குற்ற எண்ணத்துடன் அவரின் மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோர் உள்ள குடும்பப் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதன் மூலம் பட்டியலின மக்களைத் தூண்டி சட்டம் - ஒழுங்கு மற்றும் சமூக அமைதியைச் சீர்குலைக்க முயலும் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், “ரஞ்சித் குடும்பத்தினரின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வன்கொடுமை நடத்தியிருக்கிறார் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. இதுபோன்று செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, “தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைத்தான் ரஞ்சித் பேசியுள்ளார். அந்தப் புத்தகத்துக்கான அணிந்துரையையும் கலைஞர் எழுதியுள்ளார். மேலும், ராஜராஜ சோழன் என்கிற தனிப்பட்டவரை ரஞ்சித் விமர்சிக்கவில்லை. அவரது ஆட்சியைத்தான் விமர்சிக்கிறார். அது தவறாக இருக்க முடியாது” என்றும் விளக்கம் அளித்தனர்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி
முன்கூட்டியே விடுதலையாகிறாரா சசிகலா? விளக்கும் தினகரன்
எடப்பாடி- மோடி: ஏழு நிமிடங்களே நடந்த சந்திப்பு!
உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?