திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாக அதிமுகவினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 19ஆம் தேதி நடைபெறும் 4 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர் முனியாண்டியை வெற்றி பெறச் செய்வதற்காக அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம் பகுதியில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை உறுதிப்படுத்தினர். அங்குள்ள வாசுகி தெருவில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த வில்லாபுரத்தைச் சேர்ந்த தமிழரசன், முத்துமணி ஆகியோரையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த சிவக்குமார், பழனிசாமி ஆகிய நால்வரைக் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 74,000 ரூபாயைத் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அவனியாபுரம் காவல் நிலையத்தில் நால்வரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடா செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.