அவசியமின்றி திமுகவைக் கமல் விமர்சித்தது கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் அப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு பிப்ரவரி 2 அன்று புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 8ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிமுகவையும் திமுகவையும் ஊழல் கட்சி என்று கமல் தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் கே.எஸ்.அழகிரியின் அழைப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது.
சில நாட்களுக்கு முன்பு கமல் பேசுகையில், “திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். ஊழல் பொதியை நாங்கள் சுமக்க முடியாது. மக்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இந்த நிலையில், அவசியமின்றி திமுகவை கமல் விமர்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆதரவாளராக, சனாதன எதிர்ப்பாளராக, இடதுசாரி சிந்தனையாளராகத் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன். பாஜக, அதிமுக மீதான எதிர்ப்பு வாக்குகள் சிதறக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என்று தலைநகர் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கருத்து கூறினேன். அந்தக் கருத்தை நான் கூறும்போது, திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்துக்கு வரவில்லை.
கமல்ஹாசன் இத்தகைய விமர்சனம் செய்திருப்பது தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு உதவுமே தவிர, அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்தக் கொள்கைகளுக்கும் உதவாது. அவர் அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஓர் அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிதான் முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.