இந்தியாவில் வறுமையை ஒழிப்பதற்குத் தரமான கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுவது அவசியமாகும் என்று துணைக் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 10ஆம் தேதி பெங்களூருவில் சி.எம்.ஆர். பல்கலைக் கழக வளாகத் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசுகையில், ”நல்ல தரமான கல்வியால் வறுமை ஒழியும் என்பதோடு, பாலின இடைவெளி குறைந்து அதிக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். எனவே மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகள் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கான ஒரு மையமாக இருக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் உள்ள சவால்களைச் சந்திக்கும் அளவுக்கு மாணவர்களை உருவாக்கிட வேண்டும்.
சி.எம்.ஆர். உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் யோசிக்கும் திறனை மேம்படுத்தி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எளிமையாகக் கையாள வழிவகை செய்ய வேண்டும். காலநிலை மாற்றம், சுத்தமான ஆற்றல், வேளாண் உற்பத்தி, நீர் சேமிப்பு, கழிவு மேலாண்மை போன்ற சவால்கள் அவர்களுக்கு உள்ளன. சர்வதேச அளவில் கல்வித் துறையில் இந்தியா சிறப்பான இடத்தைக் கொண்டுள்ளது. எனவே உலகளாவிய தேவையைக் கருத்தில் கொண்டு நமது கல்வித் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.