அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
குத்துச் சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வேட்டையாடி வந்த ரித்திகாவை இறுதிச் சுற்று திரைப்படம் மூலம் திரையுலகம் பக்கம் அழைத்து வந்தவர் சுதா கொங்காரா. குத்துச் சண்டை வீராங்கனையை மையமாகக் கொண்ட திரைக்கதையை அவரிடம் விளக்கி கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அப்படம் தேசிய விருதையும் பெற்றது. அதன் பின் ரித்திகா தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த சிவலிங்கா திரைப்படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. தற்போது வணங்கா முடி படத்தில் நடித்து வரும் அவர் விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் இணைந்துள்ளார்.
பாக்ஸர் எனத் தலைப்பிடப்பட்டுள்ளதால் இந்தப் படமும் குத்துச் சண்டையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு லியோன் இசையமைக்கிறார். மதன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். எக்செட்ரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார்.