மாடுகளுக்குத் தங்கும் விடுதி!

டெல்லியில் மாடுகள் தங்குவதற்கு விடுதிகள் அமைத்துத் தரப்படும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், முதன்முறையாக விலங்களுக்கென கொள்கைகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “கால்நடை மேம்பாட்டுக்கான பராமரிப்புப் பிரிவை விலங்கு சுகாதாரம் மற்றும் நலத் துறை என்று மாற்றி அமைக்கப் பரிந்துரை செய்துள்ளோம். மாடுகளுக்கென தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். மேலும், பிரேதப் பரிசோதனை வசதியுடன் கூடிய 11 விலங்கு பிணவறைகள், உடல்களை எரியூட்டும் வசதி போன்றவற்றை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
முதலில் மாடுகள் தங்கும் ஐந்து இடங்கள் இருந்தன. அவற்றில், ஒன்றின் மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மாடுகள் தங்கும் இடங்கள் நான்காகக் குறைந்துள்ளது. டெல்லியில் கும்மன்ஹேரா என்ற இடத்தில் மாடுகளுக்கென தங்கும் விடுதிகள் அமைக்கப்படவுள்ளன. இங்கே மாடுகளுக்கு உதவியாக முதியோர்கள் தங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 18 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விலங்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம், விலங்குகள் இருக்குமிடம், அவற்றின் ஆரோக்கியம் மற்றும் செலுத்தப்பட்ட தடுப்பூசி போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.
உரிமையாளர்களால் கைவிடப்பட்ட மாடுகள் இந்த விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும், மாடுகளுக்கான உணவு, சிகிச்சை மற்றும் ஆரோக்கியத்துக்காக அரசு செய்யும் செலவுத் தொகையை மாடு உரிமையாளர்கள் அளிக்க வேண்டும் எனவும், தனது பேச்சில் கோபால் ராய் குறிப்பிட்டார். “ஜனவரி 16ஆம் தேதி திஸ் ஹஸாரி அருகே கால்நடைகளுக்காக ‘ரவுண்ட் தி கிளாக்’ என்ற மருத்துவமனை திறக்கப்படும். அரசாங்கம் தொடங்கும் முக்கியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். சில நாட்களுக்குச் சோதனை அடிப்படையில் இந்த மருத்துவமனை இயங்கும்” என்று அவர் தெரிவித்தார்.