வருகிற 2035ஆம் ஆண்டுக்குள் உலகின் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்ட நகரமாக இந்தியாவின் சூரத் திகழும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ், சர்வதேச அளவில் அதிக பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கும் நகரங்களுக்கான கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, வைரத் தொழிலை முதன்மையாகக் கொண்ட, சூரத் நகரம் 2035ஆம் ஆண்டு வாக்கில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நகரமாக இருக்கும் எனவும், பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய நகரங்களே இருக்கும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
2019 முதல் 2035 வரையில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கும் நகரங்களுக்கான பட்டியலில், 9.17 சதவிகித வளர்ச்சியுடன் சூரத் முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆக்ரா (8.58%), பெங்களூரு (8.5%), ஹைதராபாத் (8.47%), நாக்பூர் (8.41%), திருப்பூர் (8.36%), ராஜ்கோட் (8.33%), திருச்சி (8.29%), சென்னை (8.17%), விஜயவாடா (8.16%) ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. ஆப்ரிக்க நாடுகளில் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்ட நகரமாக தன்சானியாவின் தார் எஸ் சலாஸ் முதலிடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அர்மேனியாவின் தலைநகரான யெரேவன் முதலிடம் பிடித்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.