மின்னம்பலம்
அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் இன்று முதல் கர்நாடகாவில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்துவந்த மாரி செல்வராஜ் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாக்கிய படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டில் புதிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
பத்திரிகைகள், சமூக வலைதளங்கள், திரையரங்குகளில் வெகுவாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றது. தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தைப் பார்த்து நெகிழ்ந்து படக் குழுவினருக்கு வாழ்த்துகளைக் கூறினர்.
தொடக்கத்தில் மிகக் குறைவான திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்ட இந்தப் படம் அதன் பின்னர் பெற்ற தொடர் பாராட்டுகளால் தியேட்டர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அதன்படி தற்போதுவரை தமிழகத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் கவனம்பெற்ற நிலையில் தற்போது கர்நாடகாவிலும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இன்று முதல் (அக்டோபர் 12) கர்நாடக மாநிலத்தில் இந்தப் படம் திரையிடப்படுகிறது. இதுகுறித்து பா.இரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில் இந்தப் படத்தை ராதாகிருஷ்ணா அங்கு வெளியிடவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.