காய்கறிகள் விலை எகிறுகிறதா?

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் காய்கறிகள் விலை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நிலையில்லாமல் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையால் போக்குவரத்து செலவுகள் உயர்ந்து காய்கறிகள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகக் காய்கறிகள் வர்த்தகர்கள் கூறுகின்றனர். செப்டம்பர் 11ஆம் தேதி கணக்குப்படி தேசியத் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 80.87 ரூபாயாகவும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 72.97 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் 84.05 ரூபாயாகவும், டீசல் 77.13 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.83.51ஆகவும், டீசல் ரூ.75.32ஆகவும், கொல்கத்தாவில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.83.75 ஆகவும், டீசல் 75.82 ஆகவும், ஹைதராபாத்தில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் 85.75 ஆகவும், டீசல் ரூ.79.37 ஆகவும் அதிகரித்துள்ளது. கட்டுங்கடங்காத எரிபொருள் விலையுயர்வால் நாடு முழுவதும் காய்கறிகளை எடுத்துச் செல்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் விலையுயரக் கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.