சட்டக் கல்லூரி மாணவர்கள் வன்முறை வழக்கில், தண்டனையை எதிர்த்து 21 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
2008 ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன், ஆறுமுகம் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை 17ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன் உள்ளிட்ட 21 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 2016 ஜனவரியில் தீர்ப்பளித்தது.
தண்டனையை எதிர்த்து 21 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அமர்வு முன்பு இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இருதரப்பைச் சேர்ந்தவர்களும் சமரசம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்தனர். இது சம்பந்தமாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.