ஜூனியர் ஐ.எஸ்.எஸ்.எப். (ISSF) சர்வதேச உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது.
மெக்ஸிகோவில் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். (ISSF) சர்வதேச உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் இந்திய அணி முதலிடத்தைத் தட்டிச் சென்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 19 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய ஜூனியர் ஐ.எஸ்.எஸ்.எப் (ISSF) சர்வதேச உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய, சீன அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.
தொடக்கம் முதலே இரண்டு அணி வீரர்களும் பெரும்பாலான பதக்கங்களைக் கைப்பற்றினர். அதில் ஜூனியர் பெண்களுக்காக 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப் பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் இளவேனில், ஸ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோரது அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி சார்பில் மனு பாகர், அனிஷ், முஷ்கன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். மொத்தமாக இந்திய அணி 9 தங்கம், 5 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.
முதலிடத்தைப் பெற்ற சீனா மொத்தமாக 25 பதக்கங்களைக் கைப்பற்றியது. 22 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும், 6 பதக்கங்களுடன் இத்தாலி மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன. இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பெற்றது, வருங்கால அணி மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.