பிராமணர்களுக்கு சாதிச் சான்று வழங்கக் கோரித் தொடர்ந்த வழக்கில் நான்கு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிற சமுதாயத்துக்கு சாதிச் சான்று வழங்கும் அதிகாரிகள், பிராமண சமுதாயத்தினருக்கு வழங்குவதில்லை எனக் கூறி சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருணகிரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரியபோது, பிராமணர் சமுதாயத்தைச் சாதியாக அரசு அறிவிக்காததால் சாதிச் சான்று வழங்க முடியாது என வருவாய்த் துறைச் செயலர் பதிலளித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “பிராமணர்களுக்கு சாதிச் சான்று வழங்க மறுப்பது, அவர்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும். அதனால் சாதிகள் பட்டியலில் பிராமணர் சமுதாயத்தையும் சேர்த்து சான்று வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மனு மார்ச் 3 ஆம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று (மார்ச் 5) நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இது குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.