ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள பொகான் பகுதி சாலையில் பாதுகாப்புப் படையினர் நேற்று (மார்ச் 4) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு சுமார் 8 மணியளவில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வாகனத்தைப் பாதுகாப்புப் படையினர் தடுத்துநிறுத்தினர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே பாதுகாப்புப் படையினரும் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கியால் சுட்டனர்.
அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதியும், அந்தக் காரில் இருந்த மாணவர் உள்பட 4 பேரும் உயிரிழந்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஷாகித் அஹ்மத் டார் என்ற தீவிரவாதி எனவும், மற்ற மூன்று பேர் அவருக்கு உதவி செய்தவர்கள் எனவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர் குறித்தும் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.