26 கோடி லஞ்சம் பெற்ற அதிமுக அரசு: ஸ்டாலின் புகார்!

public

சிடிஎஸ் நிறுவனத்திற்கு கட்டிட அனுமதி தர அதிமுக அரசு 26 கோடி லஞ்சம் வாங்கியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கே.ஐ.டி.எஸ் கேம்பஸ் கட்டிடம் கட்டுவதற்கும், சிறுசேரியில் கட்டிட அனுமதி, மின்சார இணைப்பு வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு உலக அரங்கில் அழிக்க முடியாத பெரும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் 2.7 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டுவதற்கு கட்டிட அனுமதி பெறுவதற்காக, அதிமுக அரசில் உள்ள அதிகாரிகள் கேட்டுப்பெற்ற இந்த லஞ்சத்திற்கு, அந்நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், இந்த 26 கோடி ரூபாய் ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சிடிஎஸ் நிறுவனத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் வழக்கு தொடரப்பட்டு அவர்கள் மீது ‘கூட்டுச்சதி, ஊழல், மற்றும் பொய்யான ஆதாரங்களைத் தயாரித்தது’ போன்ற குற்றச்சாட்டுகள் அமெரிக்க நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அந்தத் தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டு விட்டது. அதனடிப்படையில் சிடிஎஸ் நிறுவனத்திற்கு ’25 மில்லியன் அமெரிக்க டாலர்கள்’ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

“அதிமுக அரசின் இந்த இமாலய ஊழல் 2012 முதல் 2016 ஆம் ஆண்டுக்குள் நடைபெற்றதாக வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் ஸ்டாலின்,

அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் இந்த ஊழல் நடைபெற்றதாகக் கருத முடியாது. ஏனென்றால், அதிகாரிகளை பணம் வசூலிக்கச் சொல்லி உத்தரவிடுவது அதிமுக அமைச்சர்கள் தான் என்பது நாடறிந்த உண்மை. ஆகவே, இந்த ’26 கோடி ரூபாய் ஊழல்’ விவகாரத்தில் அந்த 2012 முதல் 2016 வரையிலான காலகட்டங்களில் பதவியில் இருந்த வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பி தங்கமணி மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர்களாக இருந்த பி.வி ரமணா, எம்.சி சம்பத், தோப்பூர் வெங்கடாசலம், கே.சி கருப்பண்ணன் ஆகியோருக்கு இந்த அமெரிக்கன் டாலரில் நடந்த ஊழலில் நிச்சயம் பெரும்பங்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “தமிழக அரசின் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை, உடனடியாக ஊழல் வழக்கினைப் பதிவு செய்து, சிபிஐ மற்றும் இன்டர்போல் உதவியை நாடி, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் தாமதமின்றிப் பெற வேண்டும். அந்த வழக்கில் தாக்கலாகியுள்ள வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்களையும் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள அவர், ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் சிடிஎஸ் நிறுவனத்தின் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் சிறைத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *