தமிழகத்தின் சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும், சென்னையின் அடையாளங்களில் ஒன்றுமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மூலவருக்கு பி.விஜயகுமார் ரெட்டி மற்றும் பி.பிரீத்தாரெட்டி ஆகியோர் தங்க நாகாபரணத்தைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.
திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் திருமயிலை. உமையவள் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சாப விமோசனம் வேண்டி, சிவலிங்கத்தைப் பூஜித்து வழிபட்டதால் மயில் உருவாய் இருந்த தேவியார் சாபவிமோசனம் பெற்று, சிவனை பங்குனி உத்திர நன்னாளில் திருமணம் செய்துகொண்ட திருத்தலமாகும். திருஞானசம்பந்தர் அரவம் தீண்டி இறந்த அங்கம் பூம்பாவை என்னும் பெண்ணை இத்திருத்தலத்து இறைவன் மீது பதிகம்பாடி உயிர்ப்பித்த சிறப்பு பெற்ற தலமாகும். 63 நாயன்மார்களில் வாயிலார் நாயனார், மனதால் பூஜித்து முக்தி அடைந்த திருத்தலமாகும்.
இந்த திருத்தலத்தில் உள்ள கபாலீஸ்வரருக்கு முழுவதும் தங்கத்தால் ஆன நாகாபரணத்தை பி.விஜயகுமார் ரெட்டி மற்றும் பி.பிரீத்தாரெட்டி ஆகியோர் காணிக்கையாக அளித்துள்ளனர். இது 2.75 கோடி செலவில், 7.5 கிலோ எடையில் செய்யப்பட்டது. வரும் டிசம்பர் 7ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) காலை 11.30 மணியளவில் தங்க நாகாபரணம் கபாலீஸ்வரருக்குச் சமர்ப்பிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து, தீபாராதனை நடைபெறும். தற்போது, தங்க நாகாபரணம் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.