திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் கடத்தல் தொடர்ந்தால் மீண்டும் என்கவுண்டர் நடக்கலாம் என அதிரடிப் படை ஐஜி காந்தா ராவ் எச்சரித்துள்ளார்.
பாக்ராப்பேட்டை வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் நேற்று (அக்டோபர் 30) அதிகாலை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செம்மரங்களைக் கடத்திக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரைப் பார்த்தவுடனே அவர்கள் மீது கற்களை வீசிவிட்டுத் தப்பி ஓட முயன்றனர். அவர்களை எச்சரிக்கும் வகையில் போலீசார் வானத்தை நோக்கிச் சுட்டு, சரணடையும்படி எச்சரித்தனர். இதில், போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி காந்தா ராவ், “செம்மரக் கடத்தல்காரர்கள் அதிரடி படையினரைத் தாக்கியதில் பாலகிருஷ்ணா என்ற போலீஸ்காரருக்குக் கையிலும் தலையிலும் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை சரணடையும்படி எச்சரித்துள்ளனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அதில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டார். 13 செம்மரக் கட்டைகள், 6 கோடாரி, மரம் அறுக்கும் ஒரு வாள், அரிவாள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
அதனால், செம்மரக் கடத்தல் தொடர்ந்து நீடித்தால் 2015ஆம் ஆண்டில் நடந்தது போன்று மீண்டும் என்கவுண்டர் நடக்க வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ளார்.
2015ஆம் ஆண்டில் திருப்பதி சேஷாலம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். தனியாக 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.