நாரதன் படத்திற்குப் பிறகு நகுல் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘செய்’. இதில் நகுலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல் முஞ்சல் தமிழில் அறிமுகமாகிறார். இதன் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் சென்னை பகுதியின் திரையரங்க உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக நகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இதற்கு நிக்ஸ் லோபஸ் இசை அமைத்துள்ளார். துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ‘ட்ரிப்பி டர்டில்' புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மன்னு தயாரித்துவருகிறார்.
வீ ஆர் ஃபேம்லி, அரக்ஷன், காயல் ஒன்ஸ் அகைன் ஆகிய பாலிவுட் படங்களுக்குப் பிறகு தமிழில் நகுலுடன் `செய்' படத்தின் மூலம் அறிமுகமாக இருப்பதால் பெரிதும் எதிர்பார்க்கிறார் ஆஞ்சல். திரையரங்க உரிமை விற்பனையான அறிவிப்போடு நவம்பரில் படம் வெளியாக இருப்பதாகவும் நகுல் குறிப்பிட்டுள்ளார்.