“நேரு என்னை அழைக்கவில்லை!” – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published On:

| By Balaji

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கு வெடித்துள்ள கோஷ்டிப் பூசல் திமுகவினர் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருச்சியில் அடுத்த மாதம் 11வது மாநில மாநாடு நடக்கவிருப்பதையொட்டி திருச்சி – பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் மாநாடு நடைபெறும் 300 ஏக்கர் இடத்தை தூய்மைப்படுத்தும் பணிகளை நேற்று (18.1.2021) காலை துவக்கி வைத்தார் திமுகவின் முதன்மைச் செயலாளரும் முன்னால் அமைச்சருமான கே.என்.நேரு. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேரு அறுவைசிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பிய அடுத்த 5 தினங்களில் நடந்த அந்த நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள 3 திமுக மாவட்ட செயலாளர்களில் இருவர் கலந்து கொண்ட நிலையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரான அன்பில்மகேஷ் பொய்யாமொழி மட்டும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே, கே.என்.நேருவிற்கும், அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கும் பனிப்போர் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்ளாத சம்பவம் கட்சியினர் பலரிடமும் கடும் அதிருப்தியை விதைத்திருந்தது.

ADVERTISEMENT

அதே நேரத்தில், ‘திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அன்பில் மகேஷ் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட சென்றதால் மட்டுமே கலந்து கொள்ளவில்லை’ என அவரது சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆனால், இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனது தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள் இது பற்றி கேட்ட போது, “பொதுவாக மாநாடு தொடங்குவதற்கு முன்பு பூஜை போடுவது கே.என்.நேருவின் சென்டிமென்ட்” என்று கூறியவர், “மாநாடு நடக்கும் பகுதியின் மாவட்ட செயலாளர் நேருவை அழைத்திருக்கிறார். என்னை அழைக்காத விசயத்தில் எந்த அரசியலும் கிடையாது” எனக் கூறவே, அவரது பதிலால் மேலும் பரபரப்படைந்துள்ளது திருச்சி தி.மு.க.

ஆனால், ‘அந்த மாநாட்டுப் பணிகள் துவக்க விழாவில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்ளாததன் காரணமே வேறு’ என்கிறார்கள் விபரம் அறிந்த சிலர். அதாவது, கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுகிழமையன்று திருச்சியை அடுத்துள்ள முசிறியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அப்பகுதி திமுகவைச் சேர்ந்த பந்தல் கான்ட்ராக்டர் தனசேகர் என்பவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள தனது 2 உதவியாளர்களுடன் சென்றுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அப்போது, மண்டபத்தின் உள்ளே திமுக பிரமுகர்கள் பலர் இருந்த போதும் அவரை யாருமே வரவேற்க வரவில்லை எனவும், அங்கிருந்த எக்ஸ்.எம்.எல்.ஏ.ஜோதிகண்ணனின் மகன் சிவநடராஜன் என்பவர் மட்டும் மண்டபத்தில் இருந்த சில இளைஞர்களோடு வந்து அவரை வரவேற்றதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த கே.என்.நேருவின் மகன் அருண் நேருவிற்கு வரவேற்புகள் பலமாக இருந்திருக்கிறது. இதனால், வெறுப்படைந்த அன்பில் மகேஷ் நேராக மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்தி விட்டு இரண்டே நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விட்டாராம். இதனால்தான், கே.என்.நேரு கலந்து கொண்ட மாநாட்டு பணிகள் துவக்க விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

**- பாரதி**

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share