தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைக்க இந்தியா உதவியதாகக் கூறியுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் இந்தியாவுக்கு நன்றியும் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான மறைந்த ஜக்மோகன் டால்மியாவின் இரண்டாம் நினைவு விரிவுரை நிகழ்ச்சியில் நேற்று (நவம்பர் 2) கலந்துகொண்டார்.
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 1991இல் திரும்பவும் கிரிக்கெட் உலகுக்கு திரும்ப காரணமாக இருந்த இந்தியாவுக்கு நன்றி கூறவேண்டும். குறிப்பாக பிசிசிஐயின் முன்னாள் தலைவரான ஜக்மோகன் டால்மியாவுக்கு இவ்விஷயத்தில் தனிப்பட்ட நன்றி கூறவேண்டும்” எனக் கூறியதுடன் மீண்டு வந்த தென் ஆப்பிரிக்க அணி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் ஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாடியதைத் தனது 10 வயதில் பார்த்ததையும் நினைவுகூர்ந்தார் ஸ்மித்.
மேலும் இன்றைய கிரிக்கெட் போக்கு குறித்துப் பேசியபோது உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் விராட் கோலி மகத்தான வீரராக விளங்கிவருவதாகவும் ஸ்மித் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக 117 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஸ்மித் 9265 ரன்களைக் குவித்துள்ளார் . இதில் 27 சதம் அடங்கும். அதுபோல ஒருநாள் கிரிக்கெட்டில் 197 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 6989 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 10 சதம் அடங்கும். 33 டி-20யில் களமிறங்கி 982 ரன்களை சேர்த்துள்ளார்.
