ADVERTISEMENT

கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு!

Published On:

| By Balaji

ஏப்ரல் – அக்டோபர் மாதங்களில் மொத்தம் ரூ.29,099 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் மறைமுக வரிகளில் நடைபெற்றுள்ள வரி ஏய்ப்புகளை மத்திய நிதியமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவு ஆய்வு செய்து அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமார் 1,835 வழக்குகளின் கீழ் மொத்தம் ரூ.29,088 கோடி மறைமுக வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுமார் 571 வழக்குகளின் ரூ.4,562 கோடியானது ஜிஎஸ்டியின் கீழ் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகும். சேவைகள் வரியின் கீழ் மொத்தம் 1,145 வழக்குகளின் கீழ் ரூ.22,973 கோடிக்கு ஏய்ப்பு நடந்துள்ளது. இந்த விவரங்களை மத்திய நிதித் துறை அதிகாரி ஒருவர் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய மறைமுக வரிகள் மற்றும் கலால் துறையின் கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால் இந்த வரி ஏய்ப்பு அளவு இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். வரி ஏய்ப்பு மோசடிக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு தரப்பிலிருந்து ரூ.5,427 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ஜிஎஸ்டி வரி மோசடிக்கு எதிராக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.3,124 கோடியாகும். சேவைகள் வரியின் கீழ் ரூ.2,174 கோடியும், மத்திய கலால் வரியின் கீழ் ரூ.128 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

வரி மோசடிகளைக் கண்டறிய மறைமுக வரிகளுக்கான வாரியம் சார்பாக சென்ற செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி புலனாய்வு அமைப்பு அமைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share