Kஅவர்கள் தெய்வக் குழந்தைகள்!

Published On:

| By Balaji

‘குறைபாடுள்ள நோயின் பெயரால் அவர்களை அழைப்பதைவிட ‘தெய்வக் குழந்தைகள்’ என்றே அழையுங்கள்’ என பாடகி சைந்தவி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 2ஆம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ‘பேரன்புடன்’ என்கிற குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த், பின்னணிப் பாடகி சைந்தவி மற்றும் குறும்படக் குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் குழந்தைகள் இசைத்து, நடனம் ஆடி, பாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான சிறப்புக் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தனது நேரத்தை செலவிட்டுவரும் தயாரிப்பாளர் ராதா நந்தகுமார் இந்தக் குறும்படம் எப்படி உருவானது என்பது குறித்து விரிவாக பேசினார். “கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு துயர சம்பவம் சென்னையில் நடந்தது. சக மனிதர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு தெய்வக் குழந்தைக்கு நேர்ந்த சம்பவம். இன்னும் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. இங்கு அந்த சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும் என்பது சந்தேகம்.

அந்த தெய்வக் குழந்தை ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தான். அன்று அந்த துயர நாளில் அவன் தந்தை வர சற்று தாமதமாக, அவனாக வீட்டிற்குத் திரும்ப முயற்சிக்க வழி தவறிப் போனான். ஒவ்வொருவரிடமும் தனக்குத் தெரிந்த மொழியில் விபர அறிவில் முகவரி சொல்ல யாரும் அவனது நிலையைப் புரிந்துகொள்ளவில்லை.

இறுதியாக தன் தந்தை தபால் நிலையத்தில் வேலைபார்ப்பவர். ஏதாவது தபால் நிலையத்திற்குப் போய்விட்டால் அவர்கள் எப்படியாவது அவன் தந்தையின் முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துவிடுவார்கள் என்று அந்தப் பிள்ளை அங்கும் வழி கேட்டுச் சென்றுள்ளது. என்றாலும் அவனின் நிலை அவனைப் புறக்கணிக்கவைக்கவே பயன்பட்டது.

இறுதியாக, களைத்துப்போய் ஒரு சாலையோரம் அமர்ந்தவனுக்கு ஏதோவொரு தண்ணீர் லாரி எமனாக மாறிப்போனான். அந்த முயற்சிமிக்க குழந்தை இவ்வுலகை விட்டுக் கடந்தே போனான். ஒரு சிறு கவனக்குறைவும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக சிதைத்துவிடும் என்று அந்த சம்பவம் இது போன்ற குழந்தை கொண்டவர்களுக்கு உணர்த்தியது.

இதைத் தெரிந்துகொள்ளாத, உணராத பெற்றோர்கள் இன்னும் எவ்வளவோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கவனப்படுத்தவும், குழந்தைகள் மீதான பொறுப்புணர்வை அதிகப்படுத்தவும், இந்த சமூகம் அவர்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தொடங்கியதுதான் இந்த பேரன்புடன் என்ற குறும்படம்” என்று விவரித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்த், “ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த ‘பேரன்புடன்’ என்கிற மிக அற்புதமான இந்தக் குறும்படம் மிகப் பெரிய அளவில் கொண்டுசெல்லப்பட வேண்டும். இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு முன்பாக இந்தக் குறும்படத்தை உலகத் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொள்ளச் செய்யுங்கள். அதற்கு எந்த வகையிலும் உதவி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். இந்த தெய்வக் குழந்தைகளின் ஒவ்வொரு நிமிடங்களையும் மதித்து அவர்களுடன் மகிழ்ச்சியாகக் கழித்துவரும் பெற்றோர்களைப் பார்க்கும்போது அவர்களின் கால்களில் விழுந்து வணங்கத் தோன்றுகிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

பின்னணிப் பாடகி சைந்தவி பேசும்போது, “எல்லோருமே தங்களுக்குப் பிறக்கும் குழந்தை எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் சில நேரங்களில் இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைகள் பிறந்துவிடுகின்றனர்.

இவர்களைக் குறைபாடுள்ள நோயின் பெயரால் அழைப்பதைவிட ‘தெய்வக் குழந்தைகள்’ எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். அவர்களது குறைபாடுகளைக் கண்டு ஒதுக்காமல் நம்மைப் போல சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடவேண்டும். இந்தக் குறும்படம் ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்து அழகாக பேசியுள்ளது” எனக் கூறினார்.

“இந்தக் குறும்படம் உங்களை கண்கலங்க வைக்காது. மாறாக ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மனிதர்களை உங்களில் ஒருவராக சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும், அதற்கான சாத்தியங்களையும் உங்களுக்குத் தெரியப்படுத்தும்” என்கிறார் ‘பேரன்புடன்’ குறும்படத்தின் இயக்குநர் எஸ்.பி. மணி.

விரைவில் அனைவரும் பார்த்து விழிப்புணர்வு கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது இந்த படக்குழு. இயக்குநர் ராமின் வேண்டுகோளுக்கு இணங்க இக்குறும்படத்தின் பெயர் பேரன்புடன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share