அதிமுக அணிகள் இணைப்பு கேலிக் கூத்தானதா?

Published On:

| By Balaji

அதிமுகவின் இரண்டு அணிகளும் இணையுமா இணையாதா என்ற கேள்விதான், தினகரன் சிறைக்குச் சென்ற போது அரசியல் களத்தில் எழுந்த மிகப் பரபரப்பான கேள்வி. ஆனால் இன்று அணிகள் இணைப்பு குறித்து ஏதேனும் ஒரு செய்தி வந்தாலோ , அணியினர் கருத்து தெரிவித்தாலோ அது மிகுந்த நகைப்பிற்கு உரிய செய்தியாக மாறிவிட்டது. காரணம் இரு தரப்பினரும் இணைவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான். மேலும் இந்த அணிகள் இணைவதால் அதிமுகவிலோ, தமிழக அரசின் நிலைப்பாட்டிலோ எந்தப் பெரிய மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பதுதான் மக்கள் கருத்தாக இருக்கிறது.

ஓபிஎஸ் கருத்து

ADVERTISEMENT

இந்நிலையில் மீண்டும் அணிகள் இணைவது குறித்து பேசியிருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வம் கம்பம் நகரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் நேற்று (31.5.2017) கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த 45 ஆண்டுகளாக அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாகத்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நடத்தி பாதுகாத்து வந்தனர். எந்த ஒரு தனி குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் கட்சி இருக்கக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதே வழியை பின்பற்றிதான் நானும் எனது ஆதரவாளர்களும் தர்ம யுத்தத்தை தொடங்கினோம். தற்போது சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க செல்லக் கூடாது, கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயல்பட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கைக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் 2 அணிகளும் இணைவதில் எந்தவித நிபந்தனையும் இல்லை.

**கடும் விமர்சனம்**

ADVERTISEMENT

இந்நிலையில், “அதிமுக அணிகள் இணைவது குறித்து தமிழக மக்கள் யாரும் கவலைப்படவில்லை. காரணம் அரசியல் நாடகங்கள் அத்தனையும் அவர்களுக்குத் தெளிவாகவே புரிகிறது. எனவே அதிமுக அணிகள் இணைவது கேளிக் கூத்தான விஷயமாகிவிட்டது. இந்த அணிகள் இணைவதால் தங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படப்போவதில்லை என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் மக்களுக்கு நன்மை செய்தாரோ இல்லையோ தமிழகத்திற்கென்று ஒரு தனித்தன்மையை அவர் உயிரோடு இருந்தவரை கட்டிக்காத்து வந்தார். இந்திய அளவில் தமிழகத்திற்கென்று ஒரு தனித்துவமான முகம் இருந்தது. இன்று தமிழகம் தன் தனித்தன்மையை இழந்து முகமற்று நிற்கிறது. யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக, மத்திய அரசின் கைப் பாவையாக இருக்கப்போவது உறுதி. ஆகையால் அணிகள் இணைப்பு குறித்து கருத்து கூறுவதை அதிமுகவின் இரு அணிகளும் நிறுத்திக்கொண்டால் நல்லது” என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share