பணி ஓய்வு நாளில் வேலை செய்யாமல் இருக்கும் மரபை ஏற்கவில்லை என்றும் ஓய்வு என்ற வார்த்தையை வெறுப்பதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா கூறியுள்ளார். judge as oka retierd today
உச்ச நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியாக பணியாற்றியவர் ஏ. எஸ். ஓகா.
இவரது தாய் வசந்தி ஓகா கடந்த மே 21ஆம் தேதி மும்பையில் காலமானார். தாய் மரணம் அடைந்து இரண்டு நாட்களில் பணிக்கு திரும்பிய நீதிபதி ஓகாவின் பணி காலம் நாளையுடன் முடிவடைகிறது.
நாளை சனிக்கிழமை என்பதால் இன்று (மே 23) அவரது கடைசி பணி நாளாக அமைந்து விட்டது. இந்த நிலையில் இன்று பணிக்கு வந்த அவர், ஓய்வு பெறும் நாளில் சுமார் பத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஓய்வு பெறும் நீதிபதி கடைசி நாளில் பணிபுரியக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பின்பற்றப்படும் மரபை நான் ஏற்கவில்லை. எனவே எனது வழக்கமான அமர்வில் அமர்ந்து சில தீர்ப்புகளை வழங்கியதில் திருப்தி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்
நீதிபதி ஓகா தனது பணி காலத்தில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மூலம் முன்னுதாரணமாக மாறி இருக்கிறார் என்றும் அவர் நாட்டிற்கு ஆற்றிய சேவைக்கும் அநீதியை எதிர்த்துப் போராடும் திறனுக்கும் வழக்கறிஞர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர் என்றும் லைவ் லா ஊடகம் கூறியுள்ளது.
இன்று தீர்ப்புகளை வழங்கிய பிறகு நீதிபதி ஓகா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வுக்கு வந்தார். அப்போதுதான் தனது தாயார் இறந்து இரண்டு நாட்கள் ஆகி இருப்பதையும் நேற்று இறுதிச் சடங்கு முடித்துவிட்டு இன்றைக்கு பணிக்கு வந்திருப்பதையும் கூறி இருக்கிறார்.
இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஓகா அமர்வுதான், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை எதிர்த்த வழக்கை விசாரித்தது.
குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்று காட்டமாக கேள்வி எழுப்பியவர் நீதிபதி ஓகா என்பது குறிப்பிடத்தக்கது. judge as oka retierd today