பாதிக்கப்பட்ட பெண் முன்பு அந்தரங்க வீடியோவை பார்ப்பதா என்று போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் போலீசாருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. Judge Anand Venkatesh condemns the police
சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கல்லூரி படிக்கும்போது ஒருவரை காதலித்தேன். அவருடன் நான் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களிலும் ஆபாச வலை தளங்களிலும் பரவியுள்ளன. அவற்றை நீக்கும்படி மத்திய அரசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இணையத்தில் உள்ள அந்த வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். கடந்த ஜூலை 9ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இந்தநிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், “பெண் வழக்கறிஞரின் புகைப்படங்கள், வீடியோக்களை கொண்ட வலைதளங்களை முடக்க மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றிய போதுலும், இன்னும் சில வலைதளங்களில் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. அதவாது 39 வலைதளங்களில் உள்ளன” என்று தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி வீடியோ இடம்பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “பொது தளங்களில் இதுபோன்று வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை தடுக்க, “போட்டோ டிஎன்ஏ” போன்ற ஒரு செயலியை கணடறிய வேண்டும். பெண்கள் தங்கள் தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை இணையம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் இருந்து அகற்றுவதற்கான ஒரு எளிய வழிமுறை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டுவதற்காக சம்பந்தப்பட்ட வீடியோவை அப்பெண் முன்னிலையில் 7 காவல்துறையினர் பார்வையிட்டு விசாரித்தற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சைபர் கிரைமில் பெண் போலீசாரே இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை ஏழு ஆண் போலீசாருடன் சேர்ந்து அந்த வீடியோக்களைப் பார்க்க எப்படி நீங்கள் கட்டாயப்படுத்த முடியும்? அது பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணிய உரிமையை மீறுவதற்குச் சமமாகாதா?
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணையை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எப்.ஐ.ஆரில் இருந்து நீக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். Judge Anand Venkatesh condemns the police
