கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் மோதல் போக்கை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. Judge advice to prevent conflict among college students
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் மரணமடைந்தார். இந்த வழக்கில் கைதான மாணவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நிபந்தனை ஜாமீன் வழங்கினார். மாணவர்கள் மோதலை தடுக்க ஆலோசனைகளை வழங்கும்படி, இரு கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறைக்கும், காவல்துறைக்கும், மாணவர்கள் அமைப்புகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 10 ஆண்டுகளில் 231 மாணவர்கள் தொடர்புடைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு மீண்டும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, கணிதமேதை ராமானுஜன், முன்னாள் முதல்வர் அண்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர்கள், நோபல் பரிசு வென்ற சர் சி வி ராமன், பிரபல நீதிபதிகள் மாநிலக் கல்லூரியில் படித்திருக்கின்றனர் என சுட்டிக்காட்டி, புகழ்பெற்ற இந்த கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் அவர், குற்றவாளிகள் பிறப்பதில்லை… உருவாக்கப்படுகிறார்கள். கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க அறிஞர்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற பழமொழிக்கு ஏற்ப, மாணவர்கள் மோதல்களை தடுக்க நீண்டகால தீர்வாக, பள்ளிகளில் அடிக்கடி ஆசிரியர் பெற்றோர் கூட்டங்களை நடத்த வேண்டும். மாணவர்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். Judge advice to prevent conflict among college students